வணிகர்களின் குறைகள்
களையப்பட வேண்டும்!
வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தவும், வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் உருவாக்கப்பட்ட வணிகர் நாளை கொண்டாடும் வணிகர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித சமூகத்தில் உழவர்கள், நெசவாளர்கள் ஆகியோருக்கு அடுத்த நிலையில் தவிர்க்க முடியாதவர்கள் வணிகர்கள். இன்னும் கேட்டால் உழவர்களையும், நெசவாளர்களையும் அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை கொண்டு சென்று சேர்ப்பதன் மூலம் அவர்களை சமூகத்துடன் இணைப்பதும் வணிகர்களே.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திரைகடலோடியவர்கள் வணிகர்கள் தான். வணிகர்கள் வருவாய் ஈட்டுவதைக் கடந்து சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அதிகம். உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்களும் அவர்கள் தான். நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களையும் வளர்த்து, நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வணிகர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் களைந்து வணிகத்தில் வளர்ச்சியடைய இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.